Monday, October 18, 2010

பழனி தண்டாயுதபாணி சுவாமி




முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.

பெயர்க் காரணம்


பழனி தண்டாயுதபாணி கோயில்

பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்தப் பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

இதே போன்று, இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்த முருகப் பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார்.

மகன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்தப் பழனி மலைக்கு வந்தனர். முருகப் பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக்கோவில் தல புராணம் கூறுகிறது.


மலை உருவான கதை



பழனி மலையின் தோற்றம்

பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப் பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.

சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைக் குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

அப்போது முருகப் பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.

இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. சிறிது யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனைக் கீழே இறங்குமாறு கூறினான்.

ஆனால் அந்தச் சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.

பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப் பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.

இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள் பாலிப்பதாக அப்போது அருளினார்.

அன்றுமுதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள். இதனால்தான், பழனி மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி சிறப்பு

திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்தப் பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி கோவிலில் முருகப் பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப் பெருமானை தரிசிக்க மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.

குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்னர்தான் மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரைத் தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக் காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரம் இந்தக் கோவிலின் தலவிருட்சம்தான். ஆம்... இங்குள்ள தலமரம் நெல்லி மரமே.


ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம்


ஆண்டிக் கோலத்தில் முருகன்

இங்கு முருகப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்

நலம் தரும் கிரிவலம்


பழனி மலையின் இரவுத் தோற்றம்

பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளைக் கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

விழாக்கள்
  • திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
  • தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
சிறப்புக்கள்
  • முருகப் பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.
  • பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.
  • மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
  • ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.
  • சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேகக் காலத்தில் நன்கு அறியலாம்.
சர்ச்சைக்குரிய விவாதம்

பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவது படை வீடு என்று கூறுவோரும் உண்டு.

பயண வசதி

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து மற்றும் இரயில் பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலையில் வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. தற்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Sunday, October 10, 2010

ஸ்ரீ ராகவேந்திரர் நாம மகிமை



1. ராகவேந்திரர் நாமம் தன்னை நாளும் இங்கே ஜெபிக்கவே!
க்ஷேமம் உண்டாம்! ஜெயமும் உண்டாம்! ஜெகமெலாம் அருள்
தழைக்கவே!!

2. நாதன் நாமம் நாளும் பாட, நலமும் வளமும் கொழிக்கவே!
வேதம் போலது விழைந்து சொல்பவர், வெற்றிக்கும்
வழி வகுக்கவே!!

3. எடுத்த செயல்கள் அனைத்தும் இங்கே வெற்றி பெறவே நாடுவோம்!
எனையும் காக்கும் இறைவன் நாமம் இனிய தமிழில்
பாடுவோம்!!

4. நாளும் கோளும் நலமே செயவே நயந்து இங்கே நாடுவோம்!
நல்லதே செய நாடும் உள்ளம் நாளும் வளரப்
பாடுவோம்!!

5. துங்கபத்ரா நதியின் கரைதனில் தோன்றும் துணைவனை நாடுவோம்!
இங்கே இன்றே என் முன்னே வர இசைந்த குருவினைப்
பாடுவோம்!!

6. காலம் காலமாய் உலகைக் காக்கும் கருணைதனையே நாடுவோம்!
கற்றதும் மனம் களிப்பதும் தரும் கன்னித் தமிழில்
பாடுவோம்!!

7. ஞாலம் போற்றிடும் ஞானம் தந்திடும் நாதன் அருள் தனை நாடுவோம்!
நல்லதும் செய வல்லதீதென நாமும் அறிந்ததைப்
பாடுவோம்!!

8. மனிதராய் இங்கு பிறர்க்கு நலம் தரும் மனமதும் வேண்டி நாடுவோம்!
புனிதம் நாமம் புவனம் காக்கும்; போற்றிப் புகழ்ந்து
பாடுவோம்!!

9. இல்லம் காக்க ஏற்றதீதென எனக்கும் உரைத்திட்ட நாயகன்!
சொல்லும் செயலும் வேற்றுமையின்றி சுகம் தரும்
வழியுரைப்பவன்!!

10. மன இருள்தனை நீக்கி அருளும் மகிமைதனையே நாடுவோம்!
அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன் புகழ்தனைப்
பாடுவோம்!!





கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
நம் நாட்டில் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.



இந்தியா பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வடதிசையில் காந்த ஈர்ப்பு அதிக மிருக்கும். இதனால், இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது, தேவைக்கு அதிகமாக மூளைக்கு ரத்தம் பாயும். இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற் பயிற்சி செய்து விட்டு, ஓய்வெடுக்கும் போது வடக்கில் தலை வைக்கவே கூடாது. இதனால் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.



அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட, மேல் நோக்கி இழுக்கப்படும். எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும். இதைப்போலவே, வடக்கில் தலை வைத்துப் படுக்கும்போது, ரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது.




பூமத்திய ரேகைக்கு கீழுள்ள தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காந்த ஈர்ப்பு தென்திசையில் இருக்கிறது. எனவே, இந்நாடுகளில் தெற்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது.

 
வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன:

* ரிக் வேதம்
* யஜுர் வேதம்
* சாம வேதம்
* அதர்வண வேதம்

என்பனவாகும்.

இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.

இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.


வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

1. "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்)

கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.


முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.


 

பிடிக்காதது நடந்துவிட்டதா? இதோ! ஒரு எளிய பரிகாரம்

நம் வாழ்வில், நமக்கு பிடிக்காத சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. அப்படி நடந்து, அவற்றுக்கு பரிகாரம் செய்யாமல் விட்டுவிட்டால், அதற்கும் தண்டனை உண்டு என்கிறது சாஸ்திரம். இதற்கு ஒரு கதையே இருக்கிறது. சததனு என்ற மன்னன் இருந்தான். அவனுடைய மனைவி சைப்யை. கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்பவள். இவர்கள் ஒருநாள் உலா செல்லும் போது, எதிரே ஒருவன் வந்தான். அவன் அவர்களது
குலகுருவுக்கு நண்பன். ஆனால், எந்த தர்மத்தையும் கடைபிடிக்காத மகாகெட்டவன். கெட்டவர்களைப் பார்ப்பதே கேடு என்று நம்பிய காலம் அது. குருவின் நண்பன் என்பதால் சததனு அவனைப் பார்த்து "சுகமாக இருக்கிறீர்களா?' என நலம் விசாரித்து விட்டு சென்றான். அவனுடன் வந்த சைப்யையோ, அவனைப் பார்த்ததனால் ஏற்பட்ட பாவம் தீர, மூன்றே மூன்று எளிய பரிகாரங்களை அந்த இடத்திலேயே செய்தாள். என்ன தெரியுமா? சுட்டெரிக்கும் சூரியனை அண்ணாந்து பார்த்தாள். நிலத்தைக் குனிந்து பார்த்தாள். அங்கே நின்ற ஒரு பசுவைப் பார்த்தாள். அவளது பாவம் நீங்கிவிட்டது. சூரியன் பாவங்களை சுட்டெரித்தது. பூமி அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட கோபத்தை தடுத்து, பொறுமையைத் தந்தது. பசுவிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் அவளுக்கு அருள் செய்தனர்.

இதனால், அவள் மறுபிறவியிலும் இளவரசியாகவே பிறந்தாள். மன்னன் அதை பெரிதுபடுத்தாமல் போய்விட்டான். அதன் விளைவு, நல்லவனாக இருந்தும் அடுத்த பிறவியில் மிருகமாகப் பிறந்தான். இந்தக் காலத்தில் இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டிய நிலை நம் எல்லோருக்குமே இருக்கிறது...அப்படித்தானே!




சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.

அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.

அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.

சரஸ்வதிக்கே சாபம்




சிவனது திருவிளையாடலில் இந்த வாரம் 'சங்கப்பலகை கொடுத்த படலம்' பற்றி காண்போம். ஒரு சமயம் பிரம்மா பத்து அசுவமேத யாகம் செய்து, நீராடுவதற்காக சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி மூவரோடும் கங்கைக்கு சென்றார். அப்படி செல்லும் வழியில் சரஸ்வதி ஒரு பெண்ணின் இசையில் மயங்கி நின்றதால் பிரம்மா சாவித்திரி, காயத்ரியோடு கங்கையில் நீராடினார். தன்னை விட்டு விட்டு இவர்கள் நீராடியதால் சரஸ்வதி கோபித்துக்கொண்டார். இதையறிந்த பிரம்மா, ''குற்றம் உன்மீது இருக்க என் மீது நீ கோபித்ததால், அளவில்லாத மனிதப்பிறவி எடுப்பாய்'' என சாபமிட்டார். மனம் வருந்திய சரஸ்வதி, தங்களது அருமைத்துணைவியான நான் மனிதப்பிறவி எடுத்து மயங்கலாமா என மன்றாடினாள். மனமிறங்கிய பிரம்மா, பாண்டிய நாட்டில் அகரம் நீங்கலாக மீதி உள்ள நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக பிறக்கட்டும் என்று சாபத்தை மாற்றி தந்தார். அகரம் என்பது முதல் எழுத்து. அதே போல் ஆதி பகவனே உலகத்துக்கு முதல்வனானான். எனவே ஆதி பகவானான சோமசுந்தரர், இந்த முதல் இடத்துக்கு புலவராக வருவார் என கூறி மறைந்தார்.

இதன் படி நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக தோன்றினர். அவர்கள் வடமொழியும் தமிழும் நன்கு கற்றவராக விளங்கி, அகத்தியர் முதல் தொல்காப்பியர் வரை எழுதிய இலக்கண நூல்களை ஆராய்ந்தனர். மற்றும் பல பாடல்களை பாடினர். இவர்களை எல்லாம் சோமசுந்தரர் ஒரு புலவராக அவதரித்து மதுரைக்கு கொண்டு வந்தார்.

வங்கிய சேகர பாண்டியன், அப்புலவர்களுக்கு பரிசுகள் பல தந்து, சங்க மண்டபம் ஒன்று அமைத்து தந்தான். அப்புலவர்கள் தங்கள் புலமையால் பிற தேசத்து புலவர்களை வென்றனர். ஒரு நாள் அவர்கள் புலமையை அறிய சங்கப்பலகை தருமாறு வேண்டினர். சிவனும் அவ்வாறே பலகை தந்ததுடன், தானும் அவர்களுடன் ஒரு புலவராய் வந்து விளங்கினார். புலவர்கள் பல அரிய நூல்களை இயற்றினர்.

வில்வத்தின் விளைவு: கைலாயத்தில் உள்ள சோலையில் ஒரு வில்வ மரத்தடியில் சிவன் பார்வதி தேவிக்கு சிவாகமங்களை உபதேசித்து கொண்டிருந்தார்.வில்வ மரத்திலிருந்த கருங்குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து சிவன் மீதும், பார்வதி மீதும் பாதம் முதல் தலை வரை போட்டது. குரங்கின் இந்த செயலால் கோபத்துடன் மேலே பார்த்தார் பார்வதி. உடனே குரங்கிற்கு அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் வரப்பெற்றது. உடனே குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் பாதத்தில் விழுந்து அடியேன் செய்த பிழையை பொறுத்தருள்க என வேண்டியது.

அதற்கு சிவன், ''குரங்கே நீ கவலைப்பட வேண்டாம். ஒரு வில்வ இலையால் எம்மை அர்ச்சித்தாலே எல்லா நலன்களும் கிடைக்கும். ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளைப்பறித்து எம்மீது போட்டுள்ளாய். ஆகவே நீ மண்ணுலகில் அரிச்சந்திர குலத்தில் அரசனாகப்பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவித்து பின் கயிலை வந்து சேர்வாயாக'' என அருள்புரிந்தார்.
இப்படித்தான் தீபாவளித் திருநாள்


விஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் பவுமன். சிவபெருமானிடம் பக்தி கொண்ட இவன் சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு இணையாக விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று நிபந்தனையுடன் வரம் ஒன்றையும் பெற்றான்.

இறைவனால் அளிக்கப்படும் நல்ல வாய்ப்புகள் நல்ல வழியில் செல்லும் பொழுது நன்மை கிடைக்கிறது. ஆனால் அதிகமான செல்வம், அதிகாரம் போன்றவை வந்து விட்டால் மனம் தவறான பாதையை நோக்கியே போகிறது. பவுமனும் இப்படித்தான் தவறான வழிகளில் சென்றான். தன்னைப் பற்றித் தாயிடம் புகார்கள் சென்றாலும் தாய் எப்படித் தன்னைக் கொல்வாள் என்கிற எண்ணத்தில் தவறுகளை அதிகமாக்கிக் கொண்டே இருந்தான். பூலோகத்தில் இருந்த மக்களும், தேவலோகத்தில் தேவர்களும் இவனுடைய கொடுமைகளால் மிகவும் பாதிப்படைந்தனர்.

சிவனிடம் சொன்னார்கள். விஷ்ணுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல்லத் தயங்கினார்கள். தாயான பூமாதேவியோ, பிறர் தனக்கு செய்யும் கொடுமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமைசாலி. சொந்த மகனைக் கொல்ல அவள் சம்மதிப்பாளா? என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான்.

இருப்பினும் தாயான பூமாதேவி அவனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார்.பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.

அவன் இறக்கும் சமயத்தில் பூமாதேவிக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், "எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

இப்படித்தான் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியது.

  • இறைவனுக்கே மகனாக இருந்த போதிலும் சில நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும்.

    தாய் ஒருவனை எவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.
  • இறப்பு என்பது தவிர்க்க இயலாது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும்.
-இப்படி சில படிப்பினைகளைச் சொல்லும் தீபாவளி சொல்வது இதுதான்.

நல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் எனும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்குப் பயனுடையதாய் வாழுங்கள்.

ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம் 236 அடி <உயரமுடையது. முன்பக்க அகலம் 166 அடி. பக்கவாட்டு அகலம் 97 அடி. ஆசியாவிலேயே மிக <உயரமானது. இதை அமைக்க 1.75 கோடி ரூபாய் செலவானது. 13 நிலைகள் கொண்டது. கோபுரத்தின் எடை ஒரு லட்சத்து 28 ஆயிரம் டன். உச்சியில் 13 கலசங்கள் உள்ளன. கலசங்களின் உயரம் 10.5 அடி. ஒன்றின் எடை 135 கிலோ. கோபுரத்தைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆயிற்று. இதற்கு 2 ஆயிரம் டன் சிமென்ட், 30 டன் இரும்பு தேவைப்பட்டது. மாமல்லபுரம் சிற்பி கணபதி ஸ்தபதி இதன் திட்டவடிவை அமைத்தார். சிவப்பிரகாச ஸ்தபதி கட்டி முடித்தார்.






இந்து மதம் சொல்லும் கீழ்காணும் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

வேதம்-4
1. இருக்கு 2. சாமம் 3. யசுர் 4. அதர்வம்

வேதாங்கம்-6
1. சிக்ஷை 2. சந்தசு 3. சோதிடம் 4. வியாகரணம் 5. நிருத்தம் 6. கற்பம்

உபாங்கம்-4
1. மீமாஞ்சை 2. நியாயம் 3. புராணம் 4. ஸ்மிருதி

மீமாஞ்சை-2
1. பூருவமோமாஞ்சை 2. உத்தரமீமாஞ்சை

நியாயம்-2
1.கெளதம சூத்திரம் 2. காணத சூத்திரம்

புராணம்-18
1.பிரம புராணம் 2. பதும புராணம் 3. வைணவ புராணம் 4. சைவ புராணம் 5. பாகவத புராணம் 6. பவிடிய புராணம் 7. நாரதீய புராணம் 8. மார்க்கண்டேய புராணம் 9. ஆக்கினேய புராணம் 10. பிரமகைவர்த்த புராணம் 11. இலிங்க புராணம் 12. வராக புராணம் 13. காந்த புராணம் 14. வாமண புராணம் 15. கூர்ம புராணம் 16. மற்ச புராணம் 17. காருட புராணம் 18. பிரமாண்ட புராணம்

ஸ்மிருதி-18
1. மனு ஸ்மிருதி 2. பிரகஸ்பதி ஸ்மிருதி 3. தக்ஷ ஸ்மிருதி 4. யம ஸ்மிருதி 5. கெளதம ஸ்மிருதி 6. அங்கிர ஸ்மிருதி 7. யாஞ்ஞவ்ல்கிய ஸ்மிருதி 8. பிரசேத ஸ்மிருதி 9. சாதாதப ஸ்மிருதி 10.பராசர ஸ்மிருதி 11. சம்வர்த்த ஸ்மிருதி 12. உசன ஸ்மிருதி 13. சங்க ஸ்மிருதி 14. லிகித ஸ்மிருதி 15. அத்திரி ஸ்மிருதி 16. விஷ்ணு ஸ்மிருதி 17. ஆபத்தம்ப ஸ்மிருதி 18. ஹாரித ஸ்மிருதி

இதிகாசம்-3
1.சிவரகசியம் 2. இராமாயணம் 3. பாரதம்

சைவாகமம்-28
1. காமிகம் 2. யோகஜம் 3. சிந்தியம் 4. காரணம் 5. அசிதம் 6. தீப்தம் 7. சூக்குமம் 8. சகக்சிரம் 9. அஞ்சுமான் 10. சுப்பிரபேதம் 11. விசயம் 12. நிச்சுவாசம் 13. சுவாயம்புவம் 14. ஆக்னேயம் 15. வீரம் 16. ரெளரவம் 17. மகுடம் 18. விமலம் 19. சந்திரஞானம் 20. முகவிம்பம் 21. புரோற்கீதம் 22. லளிதம் 23. சித்தம் 24. சந்தானம் 25. சர்வோக்தம் 26. பாரமேசுவரம் 27. கிரணம் 28. வாதுளம்

வைஷ்ணவாகமம்-2
1.பாஞ்சராத்திரம் 2. வைகானசம்

மேலுலகம்-7
1. பூலோகம் 2. புவர்லோகம் 3. சுவர்லோகம் 4. மகர்லோகம் 5. சனலோகம் 6. தபோலோகம் 7. சத்தியலோகம்

கீழுலகம்-7
1. அதலம் 2. விதலம் 3. சுதலம் 4. தலாதலம் 5. ரசாதலம் 6. மகாதலம் 7. பாதாளம்

தூவீபம்-7
1. ஜம்பூத்துவீபம் 2. பிலஷத்துவீபம் 3. சான்மலித்துவீபம் 4. குசத்துவீபம் 5. கிரெளஞ்சத்துவீபம் 6. சாகத்துவீபம் 7. புஷ்கரத்துவீபம்

சமுத்திரம்-7
1.லவண சமுத்திரம் ( லவணம்-உப்பு) 2. இக்ஷீ சமுத்திரம் ( இக்ஷூ-கருப்பஞ்சாறு) 3. சுரா சமுத்திரம் (சுரா-கள்ளு) 4. சர்ப்பி சமுத்திரம் (சர்ப்பி-நெய்) 5. ததி சமுத்திரம் (ததி- தயிர்) 6. க்ஷீர சமுத்திரம் (க்ஷீரம்-பால்) 7. சுத்தோதக சமுத்திரம் (சுத்தோதகம்-நல்ல நீர்)

வருஷம்-9
1. பாரத வருஷம் 2. கிம்புருஷ வருஷம் 3. ஹரி வருஷம் 4. இளாவிருத வருஷம் 5. இரமியக வருஷம் 6. இரண்மய வருஷம் 7. குரு வருஷம் 8. பத்திராசுவ வருஷம் 9. கேதுமாலவ வருஷம்

முத்தி நகரம்-7
1. அயோத்தி 2. மதுரை 3. மாயை (ஹரித்துவார்) 4. காசி 5. காஞ்சி 6. அவந்தி 7.துவாரகை.

பாடை நிலம்-18
1.திராவிடம் 2. சிங்களம் 3. சோனகம் 4. சாவகம் 5. சீனம் 6. துளுவம் 7. குடகம் 8. கொங்கணம் 9. கன்னடம் 10. கொல்லம் 11. தெலுங்கம் 12. கலிங்கம் 13. வங்கம் 14. கங்கம் 15. மகதம் 16.கடாரம் 17. கெளடம் 18. குசலம்.
தவறைத் திருத்துங்கள்


* தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து தியானம் செய்து மனதை ஒருமுகப்படுத்துங்கள். தியானம் செய்ய தனியிடம் தேவை. அந்த இடம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது
* சைவ உணவை சாப்பிடுங்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். மிதமான உணவு ஆரோக்கியவாழ்வுக்கு மிகவும் ஏற்றது.
* உங்கள் வருமானத்தில் பத்தில் ஒருமடங்கை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கப் பழகுங்கள்.
* உங்களது தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எளிமையில் ஈடுபாடு கொள்ளுங்கள். மனதிருப்தியே இன்ப வாழ்வு என்பதை உணருங்கள்.
* எந்த நிலையிலும் உண்மையை மட்டும் பேசுங்கள். கொஞ்சமாகப் பேசுங்கள். இனிமையான மற்றவர் மனம் கவரும் விதத்தில் பேசுங்கள்.
* செய்த தவறுகளைக் குறித்து எண்ணிப் பார்த்து உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் சுயசோதனை என்பர். அடுத்தவர்களின் குறையைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
-சிவானந்தர்

ஆன்மாவைத் தெரியுமா?



ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தன்மையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும், சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.

ஆன்மாக்கள் நல்வினை, தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந்துழலும்.

நால்வகைத் தோற்றங்கள்:

அண்டசம், சுவேதசம், உற்பிச்சம்,சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் வியர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சுராயுசம் கருப்பையிற் தோன்றுவன.

எழுவகைப் பிறப்புகள்:

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.
கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வியர்வையிலே கிருமி, பேன் முதலிய சில ஊர்வனவும் விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர், கொம்பு, கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனி பேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனி பேதம், நாற்கால் விலங்குகள் பத்து நூறாயிரயோனி பேதம், பறவை பத்து நூறாயிரயோனி பேதம், நீர்வாழ்வன பத்து நூறாயிரயோனி பேதம், ஊர்வன பதினைந்து நூறாயிரயோனி பேதம், தாவரம் பத்தொன்பது நூறாயிரயோனி பேதம் ஆக எண்பத்து நான்கு நூறாயிரயோனி பேதம்.

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், காது எனும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என ஆறு வகைப்படும். புல்லும்,மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள்.

சிப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள். கரையானும், எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தகத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும், வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும், பறவையும் அந்நான்கினோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும், மனிதர்களும் அவ்வைந்தினோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அனுபவிக்கும். அப்படி அனுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இருவினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து அவைகளின் பயன்களாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும்.

இப்படியே,தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும், காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படி பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகள் எல்லாவற்றிலும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது. உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சில காலம் வாழ்ந்து அழியினும் அழியும். மூன்று வயதுக்கு மேல் பதினாறு வயது வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும்.

அதற்கு மேல் நாற்பது வயது வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மைதான். அழியுங்காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்தச் சரீரம், உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

மன, உடல் நோய்களை அகற்றும் ஸ்லோகம்

மன, உடல் நோய்களை அகற்றும் ஸ்லோகம்

அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்


நச்யந்தி ஸகலா ரோகா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்

ஆர்த்தா விஷண்ணா சிதிலாஸ்ச பீதா கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா

ஸங்கீர்த்ய நாராயண ஸப்தமாத்ரம் விமுக்தது கா ஸுகினோ பவந்து.




பொதுப் பொருள்:அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்ற மகாவிஷ்ணுவின் நாமங்களை, உள்ளம் நெகிழ உச்சரிப்பவர்களுடைய அனைத்து வகை நோய்களும் விரைவில் அவர்களை விட்டு விலகும். மன நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் துக்கத்தில் ஆழ்ந்தவர்களும் பய உணர்வு கொண்டவர்களும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாறு நாராயணனின் சங்கீதமான நாமங்களை இதயம் கசிந்து சொல்வார்களானால், தத்தமது உபாதைகளிலிருந்து அவர்கள் விடுபட்டு நலம் பெறுவார்கள்.


ஆயகலைகள் அறுபத்து நான்கு



ஆயகலைகள் அறுபத்து நான்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரும்மம்
23. வீணை
24. வேணு (புல்லாங்குழல்)
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம்
27. அத்திரப் பரிட்சை
28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை
33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகருடனம்
37. உச்சாடனம்
38. வித்து வேடனம் (ஏவல்)
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
44. பைபீலவாதம் (மிருக பாஷை)
45. கவுத்துவ வாதம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
53. அதிரிசியம்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம்
63. கட்கத்தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்

அட்சய திரிதியை

வேதவியாசர் வகுத்த பதினெட்டு புராணங்களில் ஸ்காந்த புராணம் மிகப் பெரியது. இதில் ஏழாவதான வைஷ்ணவ காண்டத்தில் “வைசாக மகாத்மியம்’ என்று இருபத்தைந்து அத்தியாயங்களில் எழுதி உள்ளார்.
நாம் எல்லாரும் பாவச் செயலில் இருந்து விடுபட்டு, நல்ல கர்மங்களைச் செய்து நலமாக வாழ வேண்டும் என்னும் பரம கருணையால், புராணங்கள் வாயி லாக நமக்கு உணர்த்தியுள்ளார் வியாசர்.

அம்பரீஷ மன்னனுக்கு நாரதர் வைசாக மாத மகிமையைச் சொல்கிறார். வித்யை களில் வேதம் எப்படி உயர்ந்ததோ, மந்திரங் களில் பிரணவம் எப்படி உயர்ந்ததோ, நதிகளில் கங்கை எப்படி உயர்ந்ததோ, அது போல மாதங்களில் வைகாசி உயர்ந்த தாகச் சொல்லப்படுகிறது. வைகாசி மாதத் தில் செய்யும் சகல தானங்களும் குறையா மல் பெருகும் பலனைக் கொடுக்கும்.

மிக விசேஷமாக செய்தே தீரவேண்டிய தானங்களில் தீர்த்த தானம் மிகச் சிறந்தது. வைகாசி மாதம், நல்ல வெயில் காலம். இந்த மாதத்தில் தண்ணீர்ப் பந்தல் வைப்ப வர்கள் தனது குலத்துடன் வைகுண்டத் தில் வசிப்பார்கள். குடை, விசிறி போன்றவை யும் தானத்திற்கு உத்தமம். வைகாசி மாதத்தில் தீர்த்த தானம் செய்யாதவர்கள் சாதகப்பட்சியாகப் பிறப்பார்கள். விசிறி அளிக்காதவர்கள் வாத ரோகத்தினால் பீடிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள் ளது.

உலகைப் படைத்த பகவான் எல்லா ருக்கும் எல்லா காரியங்களுக்கும் அனுகூல மாக வசந்த காலத்தைப் படைத்துள்ளார். வசந்த காலத்தில் வரும் வைகாசி மாதத்தில் பானகம், நீர்மோர் ஆகியவற்றை தானம் செய்வதால் நாம் கோரிய பலன்கள் அத்தனையும் பெறலாம் என்று புராணம் கூறுகிறது.

பானக தானத்தால் பித்ருக்கள் சந்தோஷம் அடைவதால், நம் குழந்தைகள் நலமாக இருப் பார்கள். நூறு கயா சிரார்த்தம் செய்த பலன் வைகாசி மாதத்தில் செய்யும் பானக தானத்தால் கிடைக்கிறது. நீர்மோர் தானம் செய்வதால் செல்வம் பெருகும்.
வைகாசி மாதத்தில், பகவான் ஹரி ரமாதேவி யுடன் சகல தேவ கணங்களும் புடைசூழ ஒவ்வொரு வீட்டிற்கும் வருகிறார். அந்த சமயம் தானம் செய்யாதவருடைய செல்வத்தை அபகரிக்கி றார் என்று கூறப்பட்டுள்ளது.

வைகாசி மாதத்தில் நீர் தானம் செய்யாத அரசன் ஒருவனுடைய வரலாறு வியப்பூட்டும் வண்ணம் இருக்கிறது. பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். அவனு டைய நாடு திடீரென சோபை இழந்து துர் தசையை அடைந்தது. சேனைகள் நோயால் சேதமாயின. வேற்று நாட்டு அரசன் போரிட்டு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு பூரியசஸ், அவனுடைய மனைவி சிகிநீ இருவரையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டான். காட்டிற் குச் சென்ற மன்னனும்- ராணியும் முப்பது ஆண்டுகள் சிரமப்பட்டனர். அந்த சமயம் மன்னன் தன் குருவின் நினைவாகவே இருந் தான். அப்போது தற்செயலாக அந்த வழியே யாஜகர், உபயாகர் ஆகிய ஞானோத்தமர்கள் செல்லும்போது, பூரியசஸ் அவர்களைப் பார்த்து பரவசமாகி, அவர்களுடைய பாதங்களில் விழுந்து வணங்கி தன் நிலையைச் சொன்னான்.

மன்னனின் நிலை கண்டு மனம் இரங்கிய தபோதனர்கள், அவன் இந்த நிலையை அடைவதற்கு என்ன காரணம் என்று ஞானதிருஷ்டியினால் அறிந்து மன்னனிடம் சொன்னார்கள்.

“”அரசே, நீ பத்து தலைமுறைகள் வேடனாக இருந்தாய். பத்தாவது பிறவியில் கௌட தேசத்திக் காட்டில் வசிக்கும்போது, அந்த வழியாகச் செல்வோரின் பொருட்களை அபகரித்தும், சாதுக்களை அவமதித்தும் பல கொடுமைகளைச் செய்து வந்தாய். அதன் பயனைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்” என்றனர்.

அதைக் கேட்டு வேதனையுற்ற பூரியசஸ், “”தபோதனர்களே, இவ்வளவு கொடுமை செய்திருந்தும் நான் அரசனாக எப்படிப் பிறந் தேன்?” என்று கேட்டான். அதற்கு தபசிகள், “”மன்னா! ஒரு சமயம் இரண்டு வைசியர்களும், ஒரு அந்தணரும் இந்தக் காட்டு வழியே செல்லும்போது நீ அவர்களை அடித்துத் துன் புறுத்தினாய். அவர்களுடைய தனங்களைக் கொய்ய நீ முயற்சித்தபோது, அந்தணன் தனங்களோடு ஓடிவிட்டார். வைசியர்கள் இறந்துவிட்டனர்.

நீ அந்தணரைத் துரத்திக் கொண்டு ஓடும்போது, அந்தணர் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்தார். பொருள் மேல் உள்ள ஆசையால் நீ அந்த அந்தணரைத் தூக்கி நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, “பொருளையெல்லாம் எங்கே மறைத்து வைத் திருக்கிறாய்?’ நீ அந்தணனுக்குக் கொடுத்த நீரினால் அவர் மயக்கம் தெளிந்தார். உன்னை அறியாமலேயே உன்னுடைய காரியத்திற்காகச் செய்த நீர் தானம் வைகாசி மாதத்தில் நடந்தது. அந்த புண்ணியத்தினால் நீ அரசனாகப் பிறந்தாய்” என்று முடித்தனர்.

வைகாசி மாதத்தில் அறிந்தோ அறியா மலோ செய்யும் சிறிது நீர் தானத்திற்கு இவ்வ ளவு மகிமையா என்று வியந்த அரசன் தன் முற்பிறவிகளை நினைத்து மனம் நொந்து, காட்டில் வசித்தபடியே ஸ்ரீ ஹரியைத் தியானம் செய்து, வெயிலில் வருவோருக்கு நிழல் கொடுத்து, நீர் தானமும் அளித்து நல்ல செயல்களைச் செய்து வந்தான். சில நாட்களில் மன்னனின் உறவினர்கள் அவனைத் தேடி வந்து அவனுக்குத் துணை புரிவதாகக் கூறினர். அவனது அரசும் அவனை அடைந்தது. மன்னனும் பலகாலம் நாட்டை நல்ல முறை யில் ஆட்சி செய்து, ஐந்து புதல்வர்களைப் பெற்று இன்பமாக இருந்து வரும்போது
ஸ்ரீ நாராயணனே தரிசனம் அளித்தார்.


“”மன்னா, என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
“”இறைவா! உங்களிடம் மாறாத பக்தியும் நாராயண நாமத்தைத் தவிர வேறு எதுவும் உச்சரிக்காத நாவும் வேண்டும்” என்றான்.
ஸ்ரீ நாராயணன் மன்னன் வேண்டியபடியே வரம் தந்து மறைந்தார். பூரியசஸ் மன்னனுக்கு மகாவிஷ்ணு தரிசனம் அளித்த நாள் திரிதியை அன்று செய்யும் தான தருமங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால், அன்று முதல் அந்த திரிதியை நாளை அட்சய திரிதியை என்று அழைத்தனர்.

புராணங்களை ஒட்டியே இன்றும் ஸ்ரீராம நவமி, புது வருடப் பிறப்பு, அட்சய திரிதியை போன்ற புண்ணிய தினங்களில் பானகம், நீர் மோர் அளிப்பது நடந்து வருகிறது.

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில்

தமிழர்கள் விசேஷமாக வழிபடும் கடவுள், தமிழ்ப் பெண்ணை மணந்த மணமகன், அகத்திய முனிவருக்கு தமிழைக் கற்றுத் தந்த குரு என்று தமிழின் முதல் கடவுளாக முருகன் திகழ்கிறார். இந்த முருகனுக்கு உள்ள அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்தத் திருக்கோவில் மட்டும் மற்ற ஐந்துபடை வீடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆம். மற்றவைகள் எல்லாம் குன்றுகளின் மேல் அமைந்திருக்க இந்தக் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர், முன்பு சீரலை வாயில் என்று அழைக்கப்பட்டது. இது மிகவும் பழமையான திருத்தலமாகும். புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது. இந்த சிவலிங்கம் கோவிலின் மூலஸ்தானத்திற்குப் பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்கங்களாக இருக்கிறது. இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.
தல வரலாறு
வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அதிக தெய்வபக்தியுள்ள சூரபத்மனுக்கு, பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். சூரபத்மன் அராஜகமான செயலைத் செய்யத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார். முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன் , பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல் நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது. சூரபத்மனின் ஒரு பாதி "நான்" எனும் அகங்காரம், மறுபாதி "எனது" எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின் வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது. அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின. சுப்ரமணியர் ஆண்மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது. இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.
கோவில் அமைப்பு
இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும். கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். ஏழு அடி ஆழமுடைய இந்த நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக அவர் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. பக்தர்கள் இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதியைப் பார்க்கலாம். அடுத்து அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் இந்தக் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது. இந்த மண்டபம் 120 அடி நீளத்தையும் 86அடி அகலத்தையும் கொண்டது. தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், 124 தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். தீராத வியாதி குணமடைய பல கோடி பக்தர்கள் திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள். இந்த மண்டபத்திற்கு அடுத்து இடும்பன் சன்னதியைப் பார்க்கலாம். ( அகஸ்திய முனிவரின் சிஷ்யனான இடும்பன் சுப்ரமணியரோடு கடுமையாக போர் செய்து தோற்று உயிர் நீத்தான். அதன் பிறகு அவருடைய அபார சக்தியை அறிந்து கொண்ட இடும்பன் சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்தனை செய்தான். இடும்பனின் பிரார்த்தனையை மெச்சிய சுப்ரமணியர் ஆறுபடை வீடுகளிலும் தன்னுடைய சன்னதிக்கு முன்னால் இடும்பனின் சன்னதி இடம்பெற வேண்டுமென்றும், தன்னை நாடி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டுமென்றும் வரத்தைக் கொடுத்தார்.)
கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார். இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள். இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சண்முகநாதரின் பின்புறத்தில் இடம் பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில் இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது.
வழிபாடுகளும் சிறப்புக்களும்.
திருக்கோவில் தினசரி பூசை நேரங்கள்
  • திருக்கோவில்நடை திறப்பு - காலை 5 மணி.
  • சுப்ரமணிய சுப்ரபாதம்-காலை 5.10 மணி.
  • திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை -காலை 5.25 மணி.
  • விஸ்வரூப தீபாராதனை -காலை 5.35 மணி.
  • கொடிமர நமஸ்காரம் -காலை 5.45 மணி.
  • உதயமார்த்தாண்ட அபிஷேகம் -காலை 6.15 மணி.
  • உதயமார்த்தாண்ட தீபாராதனை -காலை 7.00 மணி.
  • திரிகாலசந்தி ஒத்தக்கட்டளை -காலை 8.00 மணி.
  • தீபாராதனை மற்றும் ஸ்ரீபலி -காலை 8.45 மணி.
  • கலச பூசை -காலை 10.00 மணி.
  • உச்சிக்கால அபிஷேகம் -காலை 10.30 மணி.
  • உச்சிக்கால தீபாராதனை மற்றும் திருப்பலி- பகல்12.00 மணி.
  • சாயரட்சை தீபாராதனை -மாலை 5.15 மணி.
  • அர்த்த சாம அபிஷேகம் -இரவு 7.15 மணி.
  • அர்த்த சாம தீபாராதனை -இரவு 8.00 மணி.
  • ஏகாந்த தீபாராதனை,திருப்பலி -இரவு 8.15 மணி.
  • ரகசிய தீபாராதனை, மகாமண்டபம் திருகாப்பிடுதல், பள்ளியறை தீபாராதனை -இரவு 8.20 மணி.
  • திருக்கோவில் நடைசாத்துதல் -இரவு 9.00 மணி.
சிறப்புப் பூசைகள்
முருகன் கோவிலில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் இங்கும் கொண்டாடப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. இங்குதான் சுப்ரமணியர் சூரபத்மனை வதம் செய்ததாகச் சொல்லப்படுவதால் இங்கு கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர்பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. இந்த நாளில்தான் விழா நடத்தப்பட வேண்டும் என்று கந்தோத்ஸ்தவ விதிப்படலம், கவுசிகப் பிரச்ன குமார தந்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியான சூரசம்ஹார நிகழ்வுக் காட்சி
முருகப் பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று வகையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்க்கிழமையன்று முருகப்பெருமானை வழிபடுவது வார விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும் மாத விரதம் அல்லது நட்சத்திர விரதம். ஐப்பசி மாதம் சஷ்டியன்று மேற்கொள்ளும் விரதம் ஆண்டு விரதமாகும். இந்த சஷ்டி விரதமிருப்பது மிகச்சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள்.
சிறப்புக்கள்
  • இக்கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி வழங்கப்படுகிறது. இதற்கு, சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணிய சுவாமி தன் பன்னிரு கைகளாலேயே விபூதி பிரசாதம் வழங்கினார். இந்தப் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள் இந்த இலை விபூதிகளின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • விஸ்வாமித்ர முனிவரும், ஆதி சங்கரரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்த போது இருவரும் காசநோயால் அவதிப்பட்டனர். சுப்ரமணியர் தனது திருக்கரங்களால் அவர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை கொடுத்து அருள் புரிந்தார் என்றும் சுப்ரமணியருடைய விபீதியின் சக்தியால் அவர்களுடைய வியாதி குணமடைந்தது. இதில் மகிழ்ந்த ஆதி சங்கரர் சுப்ரமணியரைப் போற்றிப் புகழ்ந்து சுப்ரமணியர் புஜங்கம் என்ற பாடலைப் பாடினார்.
  • நவகிரஹ தலங்களில் திருச்செந்தூரும் ஒரு தலமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு சூரபத்மனைக் கொன்றதால் தேவர்கள் பிரஸ்பதி (குரு பகவான்) சுப்ரமணியரின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார்கள். எனவே இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் குரு பகவானின் அருளையும் கூடுதலாகப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
  • திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள் அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியதுடன் கடலும் கொந்தளித்ததால் மரக்கலம் அபாயத்தில் சிக்கிக் கொண்டதால் மரக்கலத்திலிருந்த விக்கிரகத்தால்தான் இப்படி ஏற்படுகிறது என்பதை உணர்ந்த அவர்கள் அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசி விட்டனர். அக்காலத்தில் தென்பாண்டிய நாட்டை மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றியதுடன் கடலில் தான் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். வடம்லையப்பன் கடலுக்குச் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார் என்று திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பாடப்படும் தமிழ்ப்பாடலில் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அறிவிக்கும் சிலா சாசனம் பிள்ளையன் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
  • இந்தத் திருச்செந்தூர் சுப்ரமணியரிடம் பக்தி கொண்டவர்களில் ஆதிசங்கரர், நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், கந்தசாமிப் புலவர், பாம்பன் சுவாமிகள், சேரந்தையப் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
  • இக்கோவில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு துவாரத்தில் காது வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் சப்தம் ஓம் என்பது போல் கேட்கிறது.
  • கோவிலின் அருகே கடற்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளி குகையில் வள்ளியை வழிபட நல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
  • இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொருளாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.
பயண வசதி
தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து சில பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் பயண வசதியும் செய்யப்பட்டுள்ளது.

சில அறிவுரைகள்

1. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
2. பெண்கள் எதிர்பாராமலோ, தவறு என்று தெரியாமலோ கற்பிழக்க நேரிட்டால் புண்ணிய நதியில் நன்கு மூழ்கிக் குளித்தால் அந்த குறை அகன்று விடும்.
3. உடல் ஊனமுற்றவர், கல்வியில்லாதவர்கள், முதியவர்கள், வறுமையிலிருப்பவர்கள் குறைகளை சுட்டிக் காட்டிப் பேசக் கூடாது.
4. பிறர் அணிந்த ஆடைகள், செருப்பு, மாலை,படுக்கை, இருக்கை போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது.
5. பகலில் உறங்குதல், உடலுறவு கொள்வது, பால் பருகுவது கூடாது.
6. நெல்லிக்காய், ஊறுகாய், இஞ்சி, தயிர் இவற்றை இரவில் உண்ணக் கூடாது.
7.நோயாளி, கர்ப்பிணி, உடல் ஊனமுற்றவர், முதியவர்கள் போன்றவர்களுக்கு ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்.
8. நெருப்புத் துண்டுகளை அணைக்காமல் கீழே போடக் கூடாது.
9. இருட்டில் வெளிச்சமில்லாமல் சாப்பிடக் கூடாது.
10. நம்மை ஒருவர் கேட்காத நிலையில், நாம் அவருக்கு அறிவுரை கூறக்கூடாது.

மனம் போனபடி போகாதே

பகவான், மனிதனையும் படைத்து, அவனுக்கு பல விதமான உறுப்புகளையும் கொடுத்ததோடு, எண்ணங்களுக்கு காரணமான மனதையும் கொடுத்தான்; இந்த மனதில் தான், பல எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை செயல்படுத்த, உடல் உறுப்புகள் பயன்படுகின்றன. இந்த உடல் உறுப்புகளைக் கொண்டு, நல்ல காரியங்கள் செய்து, புண்ணியம் பெறலாம்; தவறுகளை செய்து, பாவத்தையும் சம்பாதிக்கலாம். புண்ணியம் செய்தவர்கள் நல்ல கதியடைவர்; அதாவது, புண்ணிய லோக வாசம் கிடைக்கும்.
புண்ணிய லோகம் என்பது, மேலே, மேலே என்று இரண்டு, மூன்று இடங்களை கடந்து சென்றடையும் லோகம். பரமபதம், வைகுண்டம் என்றெல்லாம் சொல்கின்றனரே… அந்த இடம். புண்ணியம் செய்தவர்கள், இந்த இடத்தை அடைவது ரொம்ப சுலபம். அங்கிருந்து புஷ்பக விமானத்தில் வந்து, சகல மரியாதையுடன் தேவர்கள் அழைத்து போவர். அங்கே இவர்கள், சகல சுகபோகங்களுடன் இருப்பர்.
பாவம் செய்தவர்கள் பாவிகள். பாவம் செய்வதற்கும், பகவான் கொடுத்த உறுப்புகள் தான் உபயோகமாகின்றன. இப்படிப்பட்டவர்களை, எமதூதர்கள் வந்து, கட்டி இழுத்துப் போவர். போகும் வழி ரொம்பவும் கொடூரமானது. வழியில் சுடு மணல், நெருப்பு, ஆறு, கல், முள் நிறைந்த பிரதேசம் வழியாக இழுத்துக் கொண்டு போய், எமதர்மன் முன் நிறுத்தி, இவன் செய்த பாவங்களை பட்டியலிட்டு படிப்பர்; பாவத்துக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.
சாதாரண நரகம், கும்பீ பாகம், ரவுரவம் என்றெல்லாம் பிரித்து வைத்திருக்கின்றனர். பாவத்தின் தன்மைக்கு ஏற்ப, அந்தந்த வகுப்புகள் தண்டனையாக கிடைக்கும். அங்கே போய் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதையெல்லாம் படிக்கும் போது, பயமாகத் தான் இருக்கும். ஆனால், மனம் சும்மா இருப்பதில்லையே… எதையாவது செய்யச் சொல்கிறது. பாவம், புண்ணியம் இரண்டுக்குமே மனம் தான் காரணம்; அதனால் தான், “மனம் போனபடி போகாதே…’ என்றனர். அது நல்ல வழியா, தவறான வழியா என்பதை, எப்படி தெரிந்து கொள்வது? மகான்களிடம் விசாரணை செய்; அவர்கள் நல்வழி காட்டுவர்.
மனிதன் எப்படியாவது நற்கதி பெற முயல வேண்டும். பிறந்து விட்டால் மட்டும் போதாது; பிறவிப் பயனை அடைய வேண்டும்!


சங்கடஹர சதுர்த்தி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.



விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு
பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

விரதத்தின் பலன்கள் :

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு*ம்பகு*தி குறையும்.

விளக்கேற்றுவதன் பலன்கள்


நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது.
இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்
விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்#
ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்
இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்
மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்
நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம்

கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்




ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.

கோவிலுக்குச் செல்வது ஏன்?



ஆலயம் தொழுவது சாலவும் நன்று!’ என்று ஒரு வாக்கியம் உள்ளது. நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது.
பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது. இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது, மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்; மனதுக்கும் அமைதி கிடைக்கும். அதே சந்தர்ப்பத்தில், பகவானிடம், “பகவானே… நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்!’ என்று பிரார்த்தித்து கொள்ள சொல்லியிருக்கிறது. அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும்.
பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.
“பகவான் தான் எங்கும் இருக்கிறாரே… கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?’ என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை.
பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா?
அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது. கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும்.
கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர். அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன.
இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது.
இப்பவும், சில பெரியவர்கள், சாயந்திரம் அநுஷ்டானம் முடிந்ததும், “சந்திகாலம் ஆகிவிட்டது; கோவிலுக்குப் போய் சந்திகால தீபாராதனை பார்த்து விட்டு வந்து விடு கிறேன்…’ என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவர்.
ஒரு நாள் பொழுதை கழிக்கும் போது, கடைசியாக தெய்வ தரிசனத்தோடு முடித்தால், வாழ்நாளில் பெரும்பாலான புண்ணியத்தை அடையலாம்.


கர்வத்தை அழிக்கும் ராமமந்திரம்!


சிலர் பக்திப்பூர்வமாக, 'ராமா' என்பர். வேறு சிலரோ, ஏதாவது தவறு செய்து விட்டால், தலையில் அடித்தபடியே, 'ராமா ராமா' என்பர். தொனி தான் மாறுபடுமே தவிர, ராம மந்திரத்தை எப்படிச் சொன்னாலும், அதற்குரிய பலன் கிடைக்கும்; குறிப்பாக, ராம மந்திரம் கர்வத்தை அழிக்கும் சக்தியுடையது.
ராமாயணத்தில் பலவகை உண்டு. அதில் ஆனந்த ராமாயணம் என்பதும் ஒன்று. இதில் ஒரு காட்சி —
இலங்கையில் சீதையை சந்தித்த பின், திரும்பிக்கொண்டிருந்த ஆஞ்சநேயர், வானில் பறந்தபடியே நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அசை போட்டார். கடல் தாண்டிச் சென்றது, ராவணனின் மகனைக் கொன்றது, ராவணனையே நேரில் சந்தித்தது, இலங்கைக்கு தீ வைத்தது, வடிவங்களை சுருக்கியும், நீட்டியும் சீதையைக் கண்டுபிடித்தது போன்ற தான் செய்த செயல்களை நினைத்த வுடனேயே கர்வம் அவரைத் தொற்றிக் கொண்டது. 'என்னை விட பலசாலி யார் உண்டு?' என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டே பறந்தார்.
வழியில் தாகம் எடுத்தது. மகேந்திர கிரி என்னும் மலை அப்போது கண்ணில் பட்டது. அந்த மலையில் நீர்நிலை ஏதாவது இருக்கலாம் என வட்டம் போட்டு பார்த்தார்; கண்ணில் ஏதும் படவில்லை. ஓரிடத்தில் ஒரு முனிவர் இருப்பது புலப்பட்டது. அவர் முன்னால் இறங்கியவர், தண்ணீர் இருக்குமிடத்தைக் காட்டும்படி கேட்டார்.
முனிவர் பேசவில்லை; ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினார். ஆஞ்சநேயர் அவர் முன்னால், தன்னிடமிருந்த ராமனின் முத்திரை மோதிரம், சீதையின் சூடாமணி ஆகியவற்றை வைத்துவிட்டு போனார். அப்போது ஒரு குரங்கு வந்து, அங்கிருந்த சூடாமணியையும், முத்திரை மோதிரத்தையும் அருகில் இருந்த முனிவரின் தீர்த்தச்செம்புக்குள் போட்டுவிட்டது.
ஆஞ்சநேயர் திரும்பி வந்து பார்த்தார்; பொருட்களைக் காணாமல் முனிவரிடம் கேட்டார். முனிவர் செம்பை நோக்கி கையை நீட்டினார். அதை ஆஞ்சநேயர் பார்க்க அதனுள் ஏராளமான முத்திரை மோதிரங்கள் கிடந்தன.
'இவை எப்படி இதனுள் வந்தன? எல்லாம் ஒன்றுபோல் உள்ளதே... இதில் என்னுடையதை எப்படி கண்டுபிடிப்பேன்?' என்றதும், முனிவர் பதிலளித்தார்.
'வானரனே... இதற்கு முன் பலமுறை பெருமாள், ராமாவதாரம் எடுத்துள்ளார். அப்போதெல்லாம் ஆஞ்சநேயர் வருவார்; என் முன்னால் வைப்பார். என் தீர்த்தச் செம்பிற்குள் அதை ஒரு குரங்கு தூக்கிப் போட்டு விடும். இவை எல்லாமே ராமனுக்குரியவை தான்...' என்றார்.
ஆஞ்சநேயர் வெட்கிப்போனார். 'அப்படியானால், பல யுகங்களில் பல ஆஞ்சநேயர்கள் இதே சாதனையைச் செய்துள்ளனரே... நான் மட்டுமே செய்ததாக கர்வம் கொண்டேனே...' என வருந்தினார்.
எவ்வளவோ முயன்றும் மோதிரத்தைக் கண்டுபிடிக்க இயலாமல், ஊர் திரும்பினார். ராமனிடம் தன் அனுபவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்.
அப்போது ராமனின் அருகில் அதே தீர்த்தச் செம்பு இருந்தது; உள்ளே பார்த்தால் அனுமன் கொண்டு சென்ற முத்திரை மோதிரம் கிடந்தது. 'இதெப்படி இங்கே வந்தது?' என்றதும், 'ஆஞ்சநேயா... என் பக்தனான உன் மனதில் கர்வம் தோன்றியவுடனேயே நான், நீ வந்த பாதையில் முனிவர் போல் அமர்ந்திருந்தேன். உன் கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன். 'ராம' மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததால், உன் கர்வம் நீங்கிற்று!' என்றார்.
ராமபிரானின் பிறந்தநாளான ராமநவமியன்று நம்மிடமுள்ள துளியளவு கர்வம் கூட அகல ஸ்ரீராமனை வேண்டுவோம்.



ஓம்காரம்




ஓம்கார நாதத்தின் உச்சரிப்பு பற்றி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

ஓ+ம் = ஓம்

’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.
ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.
மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும்.

வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதை உங்கள் கையில்

முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?



முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?
முருகன்:
முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
சரவண பவன்
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.
சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.
ஆறுமுகம்
சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
குகன்
மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.
குமாரன்
கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.
கந்தன்
கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்.
விசாகன்
விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.
வேலன்
வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.
குருநாதன்
பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார்.
சுப்பிரமணியம்
சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர். ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.
வேறு சில பெயர்கள்
கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உண்டென்பதால் வாகுலேயன் என்றும் ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும் தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது. இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. இந்த முருகக் கடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.