Sunday, October 10, 2010

பிடிக்காதது நடந்துவிட்டதா? இதோ! ஒரு எளிய பரிகாரம்

நம் வாழ்வில், நமக்கு பிடிக்காத சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. அப்படி நடந்து, அவற்றுக்கு பரிகாரம் செய்யாமல் விட்டுவிட்டால், அதற்கும் தண்டனை உண்டு என்கிறது சாஸ்திரம். இதற்கு ஒரு கதையே இருக்கிறது. சததனு என்ற மன்னன் இருந்தான். அவனுடைய மனைவி சைப்யை. கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்பவள். இவர்கள் ஒருநாள் உலா செல்லும் போது, எதிரே ஒருவன் வந்தான். அவன் அவர்களது
குலகுருவுக்கு நண்பன். ஆனால், எந்த தர்மத்தையும் கடைபிடிக்காத மகாகெட்டவன். கெட்டவர்களைப் பார்ப்பதே கேடு என்று நம்பிய காலம் அது. குருவின் நண்பன் என்பதால் சததனு அவனைப் பார்த்து "சுகமாக இருக்கிறீர்களா?' என நலம் விசாரித்து விட்டு சென்றான். அவனுடன் வந்த சைப்யையோ, அவனைப் பார்த்ததனால் ஏற்பட்ட பாவம் தீர, மூன்றே மூன்று எளிய பரிகாரங்களை அந்த இடத்திலேயே செய்தாள். என்ன தெரியுமா? சுட்டெரிக்கும் சூரியனை அண்ணாந்து பார்த்தாள். நிலத்தைக் குனிந்து பார்த்தாள். அங்கே நின்ற ஒரு பசுவைப் பார்த்தாள். அவளது பாவம் நீங்கிவிட்டது. சூரியன் பாவங்களை சுட்டெரித்தது. பூமி அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட கோபத்தை தடுத்து, பொறுமையைத் தந்தது. பசுவிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் அவளுக்கு அருள் செய்தனர்.

இதனால், அவள் மறுபிறவியிலும் இளவரசியாகவே பிறந்தாள். மன்னன் அதை பெரிதுபடுத்தாமல் போய்விட்டான். அதன் விளைவு, நல்லவனாக இருந்தும் அடுத்த பிறவியில் மிருகமாகப் பிறந்தான். இந்தக் காலத்தில் இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டிய நிலை நம் எல்லோருக்குமே இருக்கிறது...அப்படித்தானே!




சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.

அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.

அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.

No comments:

Post a Comment