Sunday, October 10, 2010

ஸ்ரீ ராகவேந்திரர் நாம மகிமை



1. ராகவேந்திரர் நாமம் தன்னை நாளும் இங்கே ஜெபிக்கவே!
க்ஷேமம் உண்டாம்! ஜெயமும் உண்டாம்! ஜெகமெலாம் அருள்
தழைக்கவே!!

2. நாதன் நாமம் நாளும் பாட, நலமும் வளமும் கொழிக்கவே!
வேதம் போலது விழைந்து சொல்பவர், வெற்றிக்கும்
வழி வகுக்கவே!!

3. எடுத்த செயல்கள் அனைத்தும் இங்கே வெற்றி பெறவே நாடுவோம்!
எனையும் காக்கும் இறைவன் நாமம் இனிய தமிழில்
பாடுவோம்!!

4. நாளும் கோளும் நலமே செயவே நயந்து இங்கே நாடுவோம்!
நல்லதே செய நாடும் உள்ளம் நாளும் வளரப்
பாடுவோம்!!

5. துங்கபத்ரா நதியின் கரைதனில் தோன்றும் துணைவனை நாடுவோம்!
இங்கே இன்றே என் முன்னே வர இசைந்த குருவினைப்
பாடுவோம்!!

6. காலம் காலமாய் உலகைக் காக்கும் கருணைதனையே நாடுவோம்!
கற்றதும் மனம் களிப்பதும் தரும் கன்னித் தமிழில்
பாடுவோம்!!

7. ஞாலம் போற்றிடும் ஞானம் தந்திடும் நாதன் அருள் தனை நாடுவோம்!
நல்லதும் செய வல்லதீதென நாமும் அறிந்ததைப்
பாடுவோம்!!

8. மனிதராய் இங்கு பிறர்க்கு நலம் தரும் மனமதும் வேண்டி நாடுவோம்!
புனிதம் நாமம் புவனம் காக்கும்; போற்றிப் புகழ்ந்து
பாடுவோம்!!

9. இல்லம் காக்க ஏற்றதீதென எனக்கும் உரைத்திட்ட நாயகன்!
சொல்லும் செயலும் வேற்றுமையின்றி சுகம் தரும்
வழியுரைப்பவன்!!

10. மன இருள்தனை நீக்கி அருளும் மகிமைதனையே நாடுவோம்!
அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன் புகழ்தனைப்
பாடுவோம்!!





கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
நம் நாட்டில் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.



இந்தியா பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வடதிசையில் காந்த ஈர்ப்பு அதிக மிருக்கும். இதனால், இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது, தேவைக்கு அதிகமாக மூளைக்கு ரத்தம் பாயும். இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற் பயிற்சி செய்து விட்டு, ஓய்வெடுக்கும் போது வடக்கில் தலை வைக்கவே கூடாது. இதனால் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.



அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட, மேல் நோக்கி இழுக்கப்படும். எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும். இதைப்போலவே, வடக்கில் தலை வைத்துப் படுக்கும்போது, ரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது.




பூமத்திய ரேகைக்கு கீழுள்ள தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காந்த ஈர்ப்பு தென்திசையில் இருக்கிறது. எனவே, இந்நாடுகளில் தெற்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது.

 
வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன:

* ரிக் வேதம்
* யஜுர் வேதம்
* சாம வேதம்
* அதர்வண வேதம்

என்பனவாகும்.

இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.

இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.


வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

1. "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்)

கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.


முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.


 

No comments:

Post a Comment