Sunday, October 10, 2010

விநாயகர் சதுர்த்தியின் மகிமை

விநாயகர் சதுர்த்தியின் மகிமை






சைவ சமயத்தவர்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக் கொள்கின்ற போதிலும், சிவனுடன் அவரது சக்தியான பரமேஸ்வரியையும், கணபதி, முருகன் முதலிய முகூர்த்தங்களையும் வழிபடுவதுண்டு. இந்தக் கொள்கையை பல திருவுருவங்களில் ஏக தெய்வத்தையே கண்டு வழிபடுவதாகக் கொள்ளவேண்டுமேயன்றி பலதெய்வ வணக்கத்தைச் சுட்டுவதாக மயக்கங்கொள்ளக்கூடாது. 'சிவஞான சித்தியாரில்' அருணந்தி சிவாச்சாரியார் தெரிவித்துள்ள இவ்வாசகங்கள் அக்கருத்தை வலியுறுத்துவதுபோல் அமைந்துள்ளன. "யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்."

இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். இந்த ஆண்டு ஆவணி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை 03.09.2008 இந்த விரத தினம் சம்பவிக்கின்றது. பிள்ளையாரின் அவதார தத்துவம்.

பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேஷன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். அது சம்பவித்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது. விநாயகரும் தத்துவங்களும்:

தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து 'ஓம்' என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் 'பிரணவன்' என்றும் 'மூத்த பிள்ளையார்' என்றும் அறியப்படுகின்றது. 'ஓங்கார நாத தத்துவம்' சிவனையும் சுட்டிநிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது. பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாக் அழைக்கப்படுகின்றார். 'ஓம்' என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். அவரது திருமேனிய ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். அவருடைய இரு திருவடுகளிலே வலது திருவடியை "முற்றறிவு" அதாவது 'ஞானசக்தி' என்றும்“ இடது திருவடியை "முற்றுத்தொழில்" அதாவது 'கிரியாசக்தி' என்றும் உணர்த்தப்படுகின்றது. அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது. எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன் னுள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்ததொரு பூதம். ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கிய தாகவே அவரது பேருந்தி காட்சி கொடுக் கின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தி யங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு 'ஐங்கரன்' என்ற நாமம் விளங் குகின்றது. அவரை 'பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர்.அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன.

வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு "பாசஞானத்தையும்' இடது பக்கமுள்ள கொம்பு "பதிஞானத்தையும்' உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.

அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் 'குண்டலினி சக்தியின்' வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது. மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது. ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

மேலும், விநாயகருக்கு 'சித்தி', 'புத்தி' என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது. விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது. துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது. உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக பிள்ளையார் சுழி எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர்.

பிள்ளையார் சுழி 'ள' என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, பு??ஜ்ஜியமன வட்டதை '0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை '' நாதம் என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளையார் சுழியை 'நாதபிந்து' என்பவர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. எக்கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

விநாயக விரதங்கள்.

ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.

மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை 'சங்கடஹர விநாயக சதுர்த்தி' என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் 'விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான 'தேவி' விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.

விநாயகரின் எல்லா விரத நாட்களையும் எல்லோரும் அனுஷ்டிப்பதில்லை. ஒருசில வைதீகச் சைவ மக்கள் மாத்திரமே சதுர்த்தி விரதங்கள் இருபத்தி நான்கையும் கைக்கொள்வதுண்டு. சிலர் ஆவணி மாதச் சதுர்த்தி விரதங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பதுண்டு. அனேகமான இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர். அத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியையும் விஷேட நோன்பு தினமாகக் கைக்கொள்வர். மேலும் சிலர் காரத்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பு??ர்வ பட்ச ஷஷ்டிவரை ஜஅதை விநாயக ஷஷ்டி என்பர்ஸ காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர். அந்த நாட்களில் அனேகமான விநாயகர் ஆலயங்களில் விஷேட பு??சை வழிபாடுகள் நடைபெறுவதுடன் 'பிள்ளையார் கதை' ஜபெருங் கதைஸ என்ற புராண படனமும் பராயணம் செய்யப்படும்.

தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, மொறிஷியஸ் தீவு மற்றும் மேற்கு நாடுகளிலும் விநாயக வழிபாடு, ஆவணிச் சதுர்த்தி தினத்தன்று மாத்திரமே கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயக சதுர்த்தியானது பத்துத் தினங்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அவர்கள் கழிமண் கடதாசி, அட்டை, பிளாஸ்ரர் ஒவ் பரிஸ் முதலிய பொருட்களைக் கொண்டு சிறியதும், பெரியதும், பிரமாண்டமானதுமான பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து வர்ணங்கள் தீட்டி அலங்கரித்து பிரதேசங்களின் சந்திகளிலும், வீதியோரங்களிலும், பொது மைதானங்களிலும் மேடையமைத்து வைத்து பத்துத் தினங்கள் வழிபாடியற்றுவர். ஆண், பெண், சிறுவர், பெரியோர், மேல்சாதி கீழ்சாதி என்ற பேதம் எதுவுமின்றி இந்துக்கள் சகலரும் ஒன்றுகூடிப் பிரார்த்தனைகள் பஜனைகளில் கலந்துகொண்டு வழிபடுவர். வழிபாடு மிகவும் கோலாகலமாக பத்து நாட்களுக்கு நீடித்து, 'ஆனந்த சதுர்த்தசியான' பத்தாம் நாள் ஆடல் பாடல்கள், பஜனைகள், வாத்திய இசைகள் சகிதம் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ, ஆறு குளங்களிலோ, கிணறுகளிலோ நீருடன் சங்கமிக்க விட்டுவிடுவர். ஜஇப்படிச் செய்வதனால் சு??ழல் மாசடைவதாக ஆர்வலர்கள் எதிர்க்குரல் எழுப்புகின்றனர்.ஸ இந்தக் கலாசாரம் மெதுமெதுவாகத் தென்னகத்திற்குள்ளும் வந்து சேர்வதாகக் கூறப்படுகின்றது. சத்திரபதி சிவாஜி மன்னர் காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த விநாய சதுர்த்தி விழா, பின்னாட்களில் நாடு வேற்று நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த காரணத்தால் விநாயக சதுர்த்தி விழாவின் முக்கியத்துவம் குன்றிவிட்டது. 1893ம் ஆண்டளவில் லோகமானிய திலகர், அந்நியரின் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக விநாய சதுர்த்திக் கொண்டாட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். அதைப் பிரபல்யப்படுத்தி பெரு விழாவாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளையும் வகுத்துவைத்தார். அன்றிலிருந்த இன்றுவரை வட மாநிலங்களில் அந்தப் பத்துத் தினங்களும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. விநாயகரின் ஒரு கரத்தில் ஏடும் மறுகரத்தில் கொம்பும் இருப்பது போன்று காணப்படுகின்ற கணத்தை 'வித்தியபிரதாதா' என அழைப்பர்.

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

1. முல்லை இலை பலன்: அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ

4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

ஜ21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானதுஸ

5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.

7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.

13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.

14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.



18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்

. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்

No comments:

Post a Comment